Monday 12 June 2017

மணிமேகலை .4

4. மணிமேகலை


தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -

டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி

சேலம் -7- (தன்னாட்சி)

டாக்டர். ஜவாஹர் பிரேமலதா,
சமூகத்தின் நிலை.. அதை நினைத்து மணிமேகலையின் இதழில் விரக்திச் சிரிப்பொன்று எழுந்தது. ஆணுக்கு ஒரு நீதி! பெண்ணுக்கு ஒரு நீதி! கண்ணுக்குத் தெரிந்த அநீதிகளின் தொகுதியை அரங்கேற்றி ஆடவிட்டிருக்கும் இதற்குப் பெயர் சமூகமா?
அமர்ந்து அமர்ந்து சலித்ததில் ஒரு களைப்பை உணர்ந்தாள்.

எவ்வளவு நேரம் அமர்ந்திருப்பது
சற்று காலார நடக்கலாம் என நினைத்தாள். சோலைக்குள் உள் பகுதியை நோக்கி நடக்க அவளுக்கு இன்னும் துணிவு வரவில்லை. முன்பு துயிலெழுந்த கடற்கரையை நோக்கிச் சென்றாள். வெயில் தணிய ஆரம்பித்திருந்தது. எனினும் கடற்கரையின் வெள்ளிய நுண் மணற் பரப்பில் சூடு இதமாகப் பரவி ருந்தது. கடலைச் சார்ந்தே கடற்கரையில் மெல்ல நடக்கத் தொடங்கினாள்.

மீண்டும் தாயை நினைத்தாள். யாரும் எதிர்க்க முடியாத சித்ராபதியை எதிர்த்து அவள் கோட்டைக்குள்ளாகவே தாய் மாதவி எதிர்ப்புக் குரல் எழுப்பியிருக்கிறாள். மணிமேகலைக்கு ஒரு காட்சி நினைவிற்கு வந்தது. சிறு வயதில் நடந்தது.


கணிகையர்கள் குல வாழ்வை விரும்பாத பெண்கள் சிலர் சித்ராபதியிடமிருந்து விலகி, செங்கல் சுமக்கும் கூலி வேலைக்குச் சென்று விட்டார்கள் என அறிந்து எப்படி கொதித்துப் போனாள். அவர்களை தலைமுறை தலைமுறையாக வறுமை வந்து வாட்டட்டும் எனத் தூற்றினாளே..குல ஒழுக்கத்தை மீறியவர்கள் எனத் தூற்றினாளே. படைவீரர்களின் துணையோடும், அரசர்களின் துணையோடும் அவர்களை அச்சுறுத்தி மீண்டும் குலத் தொழிலுக்கே வரவழைக்க எத்தனை பாடுபட்டாள். எத்தனைத் துன்பங்களைக் கொடுத்தாள். வேறு வழியில்லாமல், பிழைப்பிற்கும் வகையில்லாமல் பலர் கணிகை குலத் தொழிலிற்கு திரும்பினார்கள். சிலர் மானம் பெரிதென உயிரை விட்டு மாய்ந்தார்கள்.

அப்படிப்பட்ட சித்ராபதியின் மகள் மாதவி அவளை மீறி எதிர்ப்புக் குரல் எழுப்பி நடந்து வருகிறாளே. சித்ராபதியின் மனம் எவ்வளவு கொதிப்படைந்திருக்கும். இப்போது நான் வேறு கிடைத்து விட்டேன்.

மனம் மீண்டும் தாயை விட்டு? உதயகுமரனிடம்தாவியது. அப்படித்தாவுவதை எண்ணி அவளே வியந்தாள். தாய்க்கு அடுத்து உதயகுமரன் தன் மனதில் எப்படி இடம் பிடித்தான்? உதயகுமரனின் மனதில் என்னைப்பற்றி எத்தனை கோட்டைகளை எழுப்பி எழுப்பியிருக்கிறானோ?? உதயகுமரனிடம் என் மனதும் சென்று விட்டதே. அவனைக் கணவனாக அடைய எனக்கு விருப்பமே. ஆனால் என்னை அவன் பொருள் விலைப் பெண்ணாக அல்லவா நினைத்திருக்கிறான். அவ்வாறு அவன் நினைக்கிறான் எனத் தெரிந்தும், மனமே ஏன் அவன் பின்னால் சென்றாய்?


அவள் கால்கள் அவளுடைய எண்ண வேகத்திற்கு ஏற்ப நடைபோட்டபடி இருந்தன. வெகு தூரம் வந்து விட்டதையே அவள் அறியவில்லை.

குலமகளான சுதமதியை தெருவில் அலையவிட்டு இறுதியில் கணிகையர் குலத்தில் சேடிப் பெண்ணாக மாறும் சூழலை மிக எளிதாக இச்சமூகம் செய்துவிட்டது. ஆனால் கணிகையர் குலப் பெண் ஒரு மன்னன் மகனை திருமணம் முடித்து முறையான உயர்குலமகளாக வாழ்வதென்பது கனவிலும் இயலாத செயலாகவல்லவா இருக்கிறது. என்னே இச்சமூகத்தின் செயல்பாடு?
இந்தச் சமூகத்தில் பெண்களின் நிலை என்ன?  
பெண்ணாகப் பிறந்தால் அவளை உயிரோடு வேட்டையாடி மகிழ்வது தானா?

உயர்குலத்துப் பிறந்த கண்ணகியாவது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தாளா? இல்லையே. கற்புக்கரசியான அவளை விட்டு தன் தந்தை தன் தாயுடன் குடும்பம் நடத்தி ஊரே மெச்சும்படி, எனக்கு அவனுடைய குல தெய்வத்தின் பெயரை வைத்திருக்கிறான்

இதைக் கேள்விப்பட்ட கண்ணகியின் மனம் எப்படித் துடித்திருக்கும்? அவள் தந்தை மாநாய்க்கனாமே. உலகையே கடலில் வலம் வரக்கூடிய, உலகறிந்த அவனாலேயே தன் மகளின் வாழ்வில் கோவலனைத் திருத்தி நல்வாழ்வை ஏற்படுத்தித் தர முடியவில்லை. பொருள் தேடி வளமான வாழ்வைத் தேடி போகத்தைத் தேடியலையும் இவர்கள், பெண்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லையே.


ஊர் கூட்டி, ‘மணிமேகலைஎன்று தன் குல தெய்வத்தை மனதில் நினைத்து தனக்குத் தந்தை பெயரிட்ட நாளில், அவனின் தந்தை மாசாத்துவானும், அவன் மனைவியும் வரவில்லையே. கோவலனின் பொருட் செல்வத்தை நாடியே ஊர் திரண்டது. ஆனால் அவனுடைய உறவினர்களோ, அவனுடைய வாணிக குல மரபினரோ, அரச குலத்தினரோ யாரும் வரவில்லையாமே.


மாசாத்துவான் தன்னை தன் குலத்திற்கான களங்கம்என்று கூறியதாக அல்லவோ ஒருமுறை வயந்த மாலை கூறினாள். கோவலன் இறந்து விட்ட இந்த ஒருவருட காலத்தில் அவனுடைய உற்றார், உறவினர், அவன் பெற்றோர் யாருமே தன்னை வந்து பார்க்கவில்லையே. அவர்கள் குலதெய்வத்தைத் தானே எனக்கு பெயராக இட்டிருக்கிறார்கள். அந்தக் குல தெய்வமும் என்னைக் கைவிட்டதோ . . . . ஒரு விரக்தி சிரிப்பொன்று அவள் இதழ்களில் பூத்தது.

பணத்தில் மிதமிஞ்சிவிட்டால் ஒழுக்கக்கேடு கூட ஒழுக்கமாகிவிடுகிறதே. கண்ணகித் தாயும் சிறப்பாக வாழவில்லை. தன் வீட்டையே தாண்டாத அக்குல மகள் தன் கணவன் வந்து அழைத்த உடனே, எதுவும் கேட்காமல் உடனே கிளம்பி விட்டாளாமே.  எத்தனை ஏக்கம், எத்தனை தாபமிருந்திருக்கும். குலமகளாக இருந்தும் ஒரு குழந்தைக்குத் தாயாகும் வரம் அவளுக்குக் கிட்டவில்லையே. அந்த குற்ற உணர்வுதான் தன் தாய்க்கும் இருந்திருக்குமோ. அதனால் தான் தன்னை அந்தக் கண்ணகியின் மகள் என்றாளோ?

[தொடரும்]

x

9 comments:

  1. சுவாரஸ்யமான பதிவு...

    தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. பெண்ணியப்பார்வை?

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் படித்து விட்டு சொல்லுங்கள்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அழகாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்! தொடருவேன்.- இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  5. அழகாக எழுதுகிறீர்கள்.வாழ்த்துக்கள்! தொடருவேன்.- இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete