Monday 26 June 2017

மணிமேகலை.14

14. மணிமேகலை
தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி
சேலம் -7- (தன்னாட்சி)
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா

சூரியனைப் போல ஒளியுடைய அழகிய குழந்தை அது  அருகில் யாருமில்லை. பூங்கோதை ஓடிச் சென்று வாரி எடுத்தாள். குழந்தையற்ற அவர்களுக்குக் கடவுள் தந்த பரிசு. சாலை விடிந்தவுடன் இளபூதி விசாரித்தான். குழந்தையை யாரும் உரிமை கொண்டாடவில்லை.
மாட்டுத் தொழுவத்தில் கிடைத்த அவனுக்குத் தாய்ப்பால் எங்கிருந்து கிடைக்கும்? பசுவின் பாலைக் கொடுத்து வளர்த்தார்கள். பசு வளர்த்த பிள்ளையானான். ஆபுத்திரன் ஆனான்.
தான் வளர காரணமாகயிருந்த பசுவைத் தாயாகவே கருதினான். பூங்கோதை இளபூதியிடம் ஆபுத்திரனைக் குருகுலத்தில் சேர்க்கச் சொன்னாள். வளர்ந்து கட்டிளங் காளையானான்.
ஆவன் குருவின் வீட்டில் யாக வளர்த்த அவனையும் அழைத்திருந்தார்கள். குருவின் தொழுவத்திலிருந்த மாடுகளைப் பார்த்துக் கொள்ளும்படி குரு ஏவ, உவகையோடு ஆபுத்திரன் பசுவைக் காணச் சென்றான். நின்றிருந்த பசுவின் கண்களில் நீர் பெருகிக் கொண்டிருந்தது. உள்ளுணர்வில் ஏதோ தோன்ற குருவிடம் ஓடினான்.
‘குருவே, பசுவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறதே’
‘ஆம். விலங்குகள் முன்னுணர்வு உள்ளவை. நாளை அதைத்தான் வேள்விச் சாலையில் வெட்டப் போகிறோம்.’
‘என்ன?’
‘ஆபுத்திரா வேள்வி சிறப்பாக நடைபெற வேண்டும். எந்தக் குறையும் வந்து விடக் கூடாது தெரிகிறதா?’
ஆபுத்திரன் தலையாட்டினான். ஆனால் உள்ளுக்குள் ஒரு திட்டம் வைத்திருந்தான்.
அனைவரும் உறங்கும் வரை காத்திருந்தான். நள்ளிரவில் பசுவை அதன் இடத்திலிருந்து அப்புறப்படுத்திக் காப்பாற்றுவதே அவள் நோக்கம்.
வேள்விக்காகப் பல அந்தணர்கள் வந்திருந்தார்கள்.
அடுத்த நாள் விடியலிலேயே வேள்வியைத் தொடங்கி விடுவார்கள். அதற்குள் பசுவைக் காப்பாற்ற வேண்டும். ஊர் அரவம் அடங்கியது. ஆபுத்திரன் பசுவை விடுவித்து, ஓட்டிச் சென்றான். ஊர் எல்லையைக் கடந்து விட்டால் அதைக் காட்டில் விட்டு விடலாம் என்பது அவன் எண்ணம்.
ஆனால் இயற்கை உபாதையைக் கழிக்க எழுந்த குரு பசுத் தொழுவத்தில் இல்லாதது கண்டு அதிர்ந்தார். அவர் போட்ட கூச்சலில் ஊரே பசுவைத் தேடி புறப்பட்டது.
வேள்விக்கான பசுவை பலியிடா விட்டால், தெய்வக் குற்றம் நேர்ந்து ஊர் அழிந்து விடும் என்ற அச்சம் அவர்களை ஒன்று திரட்டியது.
பாதி வழியிலேயே ஆபுத்திரன் பிடிபட, அவனைத் திருடன் என்றது.
‘இல்லை நான் திருடவில்லை. இதைக் காப்பாற்றவே இப்படிச் செய்தேன். பசு நம் தாயல்லவா? அதன் பாலை உண்ணும் நாம் அதனைக் கொல்லலாமா?’
இளபூதி ஆபுத்திரனிடம் ஓடிவந்தான். ‘ஏனப்பா இப்படிச் செய்தாய்? தெய்வக்குற்றம் நேராதா?’
அப்பா என்னை மன்னியுங்கள். பசுவைக் கொல்வதால் தான் தெய்வக்குற்றம் நேரும். என் உயிர் போனாலும் இப்பசுவை நான் பலியிட அனுமதிக்க மாட்டேன்.’
ஒரு அந்தணன் வந்தான். ‘தாய்ப்பால் குடித்து வளர்ந்தவனாக இருந்தால் உனக்கு யாகத்தின் அருமை தெரியும். நீ மாட்டின் பாலைக் குடித்து வளர்ந்தவன் தானே. அதனால் தான் அறிவற்று செயலைச் செய்திருக்கிறாய்’
‘இவனிடம் பேசிப் பயனில்லை. இவன் யார் தெரியுமா? இளபூதி கேள். நீ வளர்த்த இவன் சாலி என்ற ஒழுக்கம் தவறிய பெண்ணின் மகன். இவனை உன் தோட்டத்தில் விட்டுச் சென்ற பின்பு அவளுக்குப் பைத்தியம் பிடித்து விட்டது. கடை வீதியில் தான் பெற்ற குழந்தையை மாட்டுத் தொழுவத்தில் விட்டு வந்த கதையைப் போவோர் வருவோரிடமெல்லாம் சொல்லி அழுது கொண்டிருந்தாள். புது ஊராதலாலும், பைத்தியமானபடியாலும் மாட்டுத் தொழுவத்தை அவளால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவனைப் பற்றிச் சொல்ல வந்தபோது, குழந்தையற்ற நீங்கள் இவன் மீது வைத்திருந்த பாசத்தைப் பார்த்து உன்னிடம் மறைத்து விட்டேன். இப்போது நம் ஊருக்கே கேடாகி விட்டான். நல்ல புத்திமதி சொல்லி அவனைத் திருத்து’ இளமதி அவனிடம் அறிவுரைகளைக் கூறினான். ஆனால் ஆபுத்திரன் அதைக் கேட்கவில்லை.
‘நீ கணிகையின் மகனே. உன்னை வளர்த்ததே பெரும் பாவம்’ என இழிவாகப் பேசினான்.
ஆபுத்திரன், ‘தந்தையே என் தாய் ஒழுக்கங் கெட்டவளாக இருந்தால் என்ன? தேவ கணிகையான திலோத்தமைக்கு வசிட்டர், அகத்தியர் என நீங்கள் போற்றும் மகன்கள் பிறக்கவில்லையா? தாங்கள் என்னை இழிவுபடுத்தினாலும் பசுவைத் தரமாட்டேன்’ என்றான்.
அந்தணர்கள் அவனிடமிருந்து அப்பசுவைப் பறிக்க முயன்றனர். அப்பசுவோ வெகுண்டு அந்தணர் ஒருவரைத் தன் கொம்பால் குத்திக் கிழித்துவிட்டு, காட்டிற்குள் ஓடி விட்டது.
வெகுண்ட இளபூதி, """"நீ இனி என் மகனில்லை. என் கண்முன் நில்லாதே. எங்காவது தொலை"" என்று ஆபுத்திரனை விட்டு நீங்கினான்.[தொடரும்]

Friday 23 June 2017

மணிமேகலை.13

13. மணிமேகலை

தமிழில் முதன் முறையாக மணிமேகலையின் கதையைத் தனிச்சிறப்பான பெண்ணியப்பார்வையோடு அணுகி இந்த நாவலை எழுதுகிறார் -
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா, இணைப்பேராசிரியர்,அரசு கல்லூரி
சேலம் -7- (தன்னாட்சி) 
டாக்டர். ஜவாஹர் பிரேமலதா,



மணிமேகலை அறவண அடிகளை கைகூப்பி வணங்கினாள் .பின் பணிந்து அடிகளின் அடி தொழுதாள். மாதவியின் கையிலிருந்த அமுதசுரபியை அவருக்கு முன்னால்   வைத்து  மீண்டும் தொழுது நின்றாள். பின் மணிமேகலை தனக்கு நடந்தவற்றையெல்லாம் அடிகளிடம் கூறினாள் . 

அவர்  அமுதசுரபியைக் கையில் எடுத்துப் பார்த்தார். கண்மூடி நெடுநேரம் தியானத்தில் இருப்பது போல் அமர்ந்திருந்தார்
பின்னர் கண்விழித்து மணிமேகலையிடம் ‘இது ஆபுத்திரனுடையது’ என்றார்.

ஆபுத்திரனா யார் அவர்பெயரே புதுமையாக இருக்கிறதே. அவருக்கு எப்படிக் கிடைத்தது அடிகளே?’ 

வடநாட்டைச் சேர்ந்த சாலியின் மகன் . . . . . . . ’ 

அப்போது அவர் கூறியதைக் கேட்டதும் மணிமேகலைக்கு
அன்று இரவு முழுதும் சாலியின் நினைவு தான். அந்த சாலி  எண்பது வயது கிழவனுக்கு மணமுடிக்கப்பட்டவள்.அப்போது சாலிக்கு  பதினைந்து வயது. ஈவிரக்கமின்றி இளம்  பெண்ணை ஒரு கிழவனுக்கு  மணமுடித்திருக்கிறார்கள். அவனுக்கு ஏற்கனவே இரண்டு மனைவிகள். ஒரு வேலைக்காரி போல் நடத்தப்பட்ட சாலிக்கு கணவனின் சந்தேகப் பார்வை மேலும் துன்பத்தைத் தந்தது. 


அவள் கணவனிடம் பாடங்களைக் கேட்க வந்த ஒருவன் அவள் படும் துயரங்களைப் பார்த்து மனம் வருந்தி இருக்கிறான். 

சாலிக்கு வீட்டு வேலை மட்டுமல்ல. அவன் கணவனுக்குப் பரிசாகக் கொடுக்கப்பட்ட மாடுகளையும் பராமரிக்க வேண்டும். பால் கறந்து விற்றுத் தானியங்களை வாங்கி வர வேண்டும். இடைவிடாத வேலை. 

புதிதாக வந்த காளை வேறு அடங்க மறுத்தது. அதைக் கயிற்றில் கட்டி வைத்தாலும் அது திமிறிக் கொண்டிருந்தது. அதைப் பெரிய கம்பத்தில் கட்டிவிட்டு மாட்டுத் தொழுவத்தை அடுத்து உணவுக் கூடத்தில் சாலி அடுப்போடு போராடிக் கொண்டிருந்தாள்.

எங்கும் புகை மண்டலம். சதா திமிறிக்கொண்டிருந்த காளைகயிற்றிலிருந்து விடுபட்டு அவளை நோக்கிப்பாய்ந்து  ஓடி வந்ததை அவள் கவனிக்கவில்லை. 

அவள் கணவனிடம் பாடங்களைக் கேட்க வந்த இளைஞன் அதைப் பார்த்து ஓடோடி வந்தான். ஆனால் அதற்குள் சாலியை அது முட்டித் தள்ளி விட்டது. அவள்  தொலைதூரத்தில்  சென்று விழுந்தாள். வெறிகொண்ட காளையை  அடக்கி, தொழுவத்தில் கட்டிய இளைஞன்விழுந்து கிடந்த அவளை நோக்கி ஓடி வந்தான். 

சாலிக்கு பலத்த அடிதான். 
கைகளில்காலில் காயம். திடீரெனத் தூக்கி எறியப்பட்டதில் அதிர்ச்சி. எழ முடியவில்லை. அந்த இளைஞன் ஓடிச் சென்று தண்ணீர் கொண்டு வந்தான்.
சாலி அதை வாங்க கை நீட்டினாள். 

என்ன துணிச்சலடா உனக்கு?’ 

அவள் கணவனின் குரல். 
இளைஞன் திரும்பிப் பார்த்தான். சாலி நடுங்கிய படியே எழுந்து நின்றாள். 

போடா வெளியே. எத்தனை நாளா நடக்கிறது’ 

ஐயா நான் சொல்றதைக் கேளுங்க’ 
கேக்கறதுக்கு என்ன இருக்கு. அதான் பார்த்தாச்சே’ 
ஐயா....அவசரப்படாதீங்க...... காளை கயிறு அவிழ்ந்து அம்மாவை தள்ளிருச்சி. அதான் காப்பாத்த வந்தேன்.’ 
சாலி கணவனிடம் ஓடினாள். உண்மையைச் சொல்ல. ஆனால் அவனோ அவளை நோக்கி வந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளினான்.’ 
சாலிக்குக் கணவனிடம் சொல்ல நல்ல செய்தி ஒன்றிருந்தது. அதுதான் அவள் கருவுற்றிருப்பது. ஆனால் நிலைமை கை மீறிவிட்டது. 
அவள் ஓடிவந்து கணவனின் கால்களைப் பிடித்துக் கொண்டு அழுதாள். 
தன் குழந்தைக்காக அவன் வாரிசுக்காக ஏற்றுக் கொள்வான் என நினைத்தாள். 
ஒழுக்கங் கெட்டவளே. என் காலைத் தொட உனக்குத் தகுதியில்லை.’ 
 ட்டி உதைத்தான். 
அந்த இளைஞன் செயலற்று வெளியேறினான். 
சுருண்டு விழுந்து மயக்கமானாள்.நள்ளிரவில் எழுந்தாள். 
கால் போன போக்கில் நடந்தாள்.
 கால் சோர ஒரு திண்ணையில் அமர்ந்தாள். வெளியே வந்த வீட்டினர் அவளைப் பார்த்துச் சாடையாக அவதூறு  பேசினர். 

அதற்குள் அவளைப் பற்றிய அவப் பேச்சுகள் பரவிவிட்டன. 

சாலியார் யாரிடமோ போய் முறையிட்டாள். அழுதாள். 

ஒழுக்கங் கெட்டவளுக்கு என்ன நீதி கிடைக்கும்’ 
அவள் கணவன் உத்தமன். நல்லவன். அவனுக்குப் போய்த் துரோகம் செய்தாளே’ ஊரார் அவளைக் கேவலப்படுத்தினார்கள். 
அவ்வூரை விட்டே சென்று விட முடிவெடுத்தாள்.கால் போன  போக்கில் தொலைதூரம் நடந்தாள். தென்திசை நோக்கி பயணப்பட்டாள். ஒரு மாட்டுத் தொழுவத்தில் ஆண் மகவை ஈன்றாள். 
அழகிய சிசுவை எப்படிக் காப்பாற்றுவது
அந்தக் காளை மட்டும் தன்னை முட்டாமலிருந்தால்அவள் கணவன் இந்தக் குழந்தையைப் பெற்றதற்காகத் தலையில் வைத்துக் கொண்டாடியிருப்பான். 
ஆனால் உலகத்தின் பார்வையில்   இந்தக்  குழந்தை ஒழுக்கங் கெட்டவளின் குழந்தை. 
இந்த உலகம் தன்னைப் பழித்தது  போதாதென்று இந்தப் பச்சிளங் குழந்தையையும் பழி க்கும்.செய்யாத தவறுக்குத் தான் சுமக்கும் பழியைதன் குழந்தையும் சுமக்க வேண்டுமா’ 
குழந்தை தன்னிடமிருக்கும் வரை  தானே  அதற்குக் களங்கமே!

சிந்தித்தாள். பச்சிளங் குழந்தையை அங்கேயே விட்டு அகன்றாள். 

குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வீட்டின் தலைவன்  இளபூதி வெளியே வந்தான்.
எங்கிருந்து அழுகை ஒலிக்கிறது. பிறந்த குழந்தையின் அழுகை. யாருக்கு குழந்தை பிறந்திருக்கும்?’ தன் மனைவியிடம் சென்று எழுப்பினான். 

பூங்கோதை உனக்குக் கேட்கிறதா?’ 

கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தாள். அவளுக்கும் குழந்தையின் அழுகை கேட்டது. இடைவிடாத அழுகை. 
அக்கம்பக்கத்தில் யாரும் பிரசவிக்கும் நிலையில் இல்லை. 
பின் யாருக்கு குழந்தை பிறந்திருக்கும்?  இருவரும் அழுகை வந்த மாட்டுத் தொழுவம் நோக்கிச் சென்றார்கள்.
 [தொடரும்]